Thursday, February 17, 2011

டும் டும் டும்


விஜிபி உலா அடுத்த நாளும் தொடர்ந்தது... காலை 9.30மணிக்கு ஆரம்பிச்சா சாயந்தரம் “அப்பா தேடுவாரே(திட்டுவாரே)ன்னு என் மண்டைக்கு உறைக்கற வரைக்கும் உட்கார்ந்து பேசிட்ட்ட்ட்டே இருப்போம்... விஜிபியில் அடிக்கடி பெங்காலி டூரிஸ்டுக்கள் ஹிப்ஹாப் வண்டிகளில் வந்திறங்குவது வழக்கம்... ஏன் நான் வட இந்தியர்கள் என்று சொல்லாமல் பெங்காலி என்று சொல்கிறேன்னு இந்த இடத்தில என்னை யாராச்சும் டவுட்டு கேக்கணும்.(யாரும் கேக்க மாட்டீங்களே...) சரி, நானே சொல்றேன்

வங்காளத்தில் திருமணம் செய்யும் பெண்ணின் கைகளில் சங்கு வளையலும் சில சிகப்பு கண்ணாடி வளையல்களும் அணிவிப்பார்கள். நாம் தாலி கட்டுவது போலத்தான் இதுவும். (ஜெனரல் நாலெட்ஜ்...) அவர்கள் கைகளை பார்த்தாலே வங்காளிகள் என்று தெரிந்துக்கொள்ளலாம். இப்படித்தான் நானும் அந்த டூரிஸ்டுகளை இனங்கண்டு ஜாக்கிடம் சொல்ல, அவரும் “அப்படியா?” என்று வாயத்தொறந்து கேட்டுக்கிட்டார்.

உட்கார்ந்து உட்கார்ந்து கால் வலிக்க ஆரம்பிச்சா, நாங்கள் எழுந்து போய் கடற்கரையில் நிற்பது வழக்கம்(முன் நாள்லயிருந்துதான்). அப்படி போகும் போது அங்கங்கே மணலில் கடை விரித்திருப்பார்கள். பொழுது போகாமலும், ஜாக்கு பர்ஸுக்கு வேட்டு வெக்கலாமா என யோசித்துக்கொண்டும் நான் கடையை ஆராய ஆரம்பித்தேன். ஜாக்கும் தலையெழுத்தேன்னு பார்த்திட்டு இருந்தார்.

அப்போது அங்கு வெண்மை நிறத்தில் சங்கு வளையல்கள் அழகாய் மின்னிக் கொண்டிருக்க, “இதை வாங்கிகோயேன்” என்றார். நாம என்ன வேணாம்னா சொல்ல போறோம்!! ’நாம வங்காளிகள் பத்தி சொன்னதை கேட்டு பயபுள்ள மனசுல என்னமோ நெனச்சிருக்கு பாரேன்’ என்று யோசித்தவாறே, சரி என்று தலையாட்டி வைத்தேன்.

உடனே அந்த வளையல்களை வாங்கி என் இரண்டு கைகளிலும் மாட்டி விட்டு, “இப்போ நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு, வங்காள முறையில்” என்று பெருமை மினுங்க சொன்னார் தலைவர். இப்போ நெனைக்க கொஞ்சம் காமெடியா இருக்குதான். ஆனா அப்போ எனக்கு சந்தோஷம் புரிபடலை... ஆனாலும் அடுத்த சீன் சோகம்தான். கல்யாணம் ஆன அன்னிக்கே நாங்க ரெண்டு பேரும் அழுதுட்டே சாயந்திரம் பிரிஞ்சி, அவர் ஃப்ரெண்டோட நைட் ஷோ சினிமாக்கும், நான் வீட்டுக்கும் போயிட்டோம். இப்படியாக முதல் கல்யாணம் முடிஞ்சுது. அழுகாச்சி சீனா இருந்தாலும் அதெல்லாம் சேர்ந்ததுதானே


”ஜில்லுன்னு ஒரு காதல்”

Wednesday, February 16, 2011

ஊர் சுத்தலாம் வாங்க....

        

            தலைப்புல இருக்குற மாதிரி கூப்பிட்டது நானில்லீங்க. நம்ம ஜாக்கு தான். தலைவர் சென்னை வந்து பார்த்த இரண்டாம் மாதமே எப்படியோ கெஞ்சி கூத்தாடி, என்னை ஆஃபீஸ் பங்க் செய்ய வைத்து, ஊர் சுத்த சம்மதிக்க வைக்க வெச்சுட்டாரு. முதல் நாள் மாலை கடற்கரையில் கட்லை வறுபடும் போதே இதை சாதித்தாகி விட்டது. இந்த ஜாக்கு வேற சென்னைக்கு புதுசா... அடுத்த நாள் எங்க போறதுன்னு ரெண்டு பேருக்குமே தெரியலை. நாள் முழுக்க வேற சுத்தணுமா? அப்புறம் வி.ஜி.பி போகலாம்ன்னு எனக்கு தோணுச்சு. நமக்கு தீம்பார்க்ன்னா ரொம்ப பிடிக்கும் வேறயா? சரி அங்கயே போயிடுவோம்ன்னு ஜாக்கும் ஓகே சொல்லியாச்சு.... 

          சென்னையில் பயன்படுத்த பைக் எதுவும் இல்லாததால் பஸ்ஸில் தான் பயணம். எனக்கு இப்ப வரைக்கும் ட்ரைவிங்க் தெரியாததால்,(ஒரே பெருமை தான் போ) ஸ்கூட்டியும் கைவசம் லேது. எனவே அடுத்த நாள் பஸ்ஸில் போவதென்று முடிவு செய்தாகி விட்டது(ஏரியால அத்தனை ஆட்டோக்காரர்களுக்கும் என் அப்பாவை தெரியும். வேறு வழி?). சென்னையின் பீக் ட்ராஃபிக் நேரத்தில் 29c எப்படி இருக்குமென்பதை சென்னைவாசிகள் அறிவர்.  அந்த பஸ்ஸில் நாங்களும் நசுங்கி பிறயும் நசுக்கி  சைதாப்பேட்டையில் இறங்கி இன்னொரு பஸ்ஸை பிடித்து விஜிபி வந்து சேர்ந்தாயிற்று...

                 நாங்கள் 9.30மணிக்கே வேறு போய் விட்டோம். பின்னே நான் வீட்டிலிருந்து ஆஃபீஸ் கிளம்பற மாதிரி 7.30க்கே கிளம்பியாச்சே.... அங்கே அப்போதுதான் துப்புரவு பணியாளர்களே தங்கள் வேலையை தொடங்கியிருந்தன்ர். ‘விடிஞ்சா போதும் கெளம்பி வந்துருதுங்க’ என்பது போல எங்களை பார்த்துவிட்டு வேலையை தொடர்ந்தனர். நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம் போலத்தான் இருக்கும். இருந்தாலும் நாங்கள் அசருவோமா?? இத்தனையும் சமாளிச்சு உள்ளே போனால், வார நாட்களில் நிறைய ரைட்ஸ் இயக்க மாட்டார்களாம்... அங்க மொத்தம் இருக்கறதே பத்து ரைட்ஸ்தான்.

                         சரி ஏதாவது ரைட் ஆரம்பிக்கற வரைக்கும் சாப்பிடலாம் என்று அதையும் முடித்தோம். சில மணி நேரம் கழித்து பெங்காலி டூரிஸ்டுகள் வந்ததும் தான் ரோலர் கோஸ்டரை இயக்கினர். ரோலர் கோஸ்டரில் பலரும் அலறவும் இந்த ஜாக்கு அதில் ஏறவே ஒத்துக்கவில்லை. நான் மிகவும் வற்புறுத்தி ஏறி விட, நான் கத்தி கொண்டே வந்தேன். (நமக்கு சத்தம் போட்டாத்தேன் பயம் தெரியாது). மிக கம்பீரமாக ஏறிய ஜாக், சுத்தமாக சத்தம் போடவே இல்லை. இறங்கி பிறகுதான் அவர் முகத்தை பார்க்க விளக்கெண்ணெய் குடித்தது போல் இருந்தார் பாவம். அதற்கு பிறகு பல முறை விஜிபி போன போதும், எந்த ரைடுக்கு கூப்பிட்டாலும் ஜாக்கு என்னை கையெடுத்து கும்பிடுவதோடு சரி...


Friday, August 13, 2010

காதலிக்கு குட்டிப்பாப்பா கிப்டு...




இந்த மஞ்சள் முக அழகன் தன் மனதை சொல்லி ஜோராக நாங்கள் ஃபோனில் காதலிக்க தொடங்கி, சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது... ஒரு வழியாக சென்னை மண்ணை மிதித்து, என்னை பார்க்க முதுகில் ஒரு துணி மூட்டையுடன் ஓடோடி வந்தார். சென்னையின் எல்லாக் காதலர்களை போலவே மெரினா எங்களையும் வரவேற்றது.

பீச்சில் ஒரு அடி தள்ளி உட்கார்ந்து ஜாக்கு காதல் பேசத் தொடங்கினார். சிறிது நேரம் கழித்து, "உனக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கேனே! என்னன்னு சொல்லு பார்ப்போம்" என்று பெருமையில் முகம் பளபளக்க கேட்டார் தலைவர். "தெரியலியே! நீங்களே சொல்லுங்க" என்றேன் மனம் முழுக்க அனுமானங்கள் தோன்ற தொடங்கியிருந்தாலும் வெளிக்காட்டாமலே.
அப்போது முதுகில் இருந்த துணி மூட்டையை திறந்தார். ஒரு பெரிய பாலிதீன் கவரை வெளியே எடுத்தார். அதற்குள் இன்னொரு சின்ன கவர், அதனுள்ளே... அழகு கொஞ்சும் ஒரு குழந்தை...

என்னது முதல் சந்திப்பில் குழந்தையான்னு பதறாதீங்க... அச்சு அசலாக ஒரு குழந்தை பொம்மை இருந்ததாக்கும் அதனுள்ளே... ஃபோனில் அடிக்கடி எனக்கு குட்டி பாப்பான்னா ரொம்ப பிடிக்கும் என்று சொன்னதன் விளைவு புரிந்தது... நல்ல வேளை பக்கத்து வீட்டு குழந்தையை தூக்கிட்டு வராமல் விட்டானேன்னு சொல்றது காதுல விழுது...
ஆனா சும்மா சொல்லக் கூடாதுங்க... அந்த‌ குழந்தை பொம்மை, பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல கொள்ளை அழகாக இருந்தது... "உனக்குத்தான் குட்டி பாப்பான்னா பிடிக்கும் இல்லை. இது தான் நம்ம சோட்டூ (ஃபோனில் என் முதல் குழந்தைக்கு நான் வைக்க போவதாக சொன்ன செல்லப்பெயர்). நான் ஊருக்கு போயிட்டாலும் இவன் உன் கூட இருப்பான்" என்று சொன்னவர் முகத்தை திரும்பி பார்த்தால், அப்படி ஒரு பெருமை அந்த முகத்தில், என்னமோ நிஜமாகவே ஒரு குழந்தைக்கு அப்பா ஆகி விட்டதைப் போல. என் மடியில் வைத்திருந்த குழந்தையின் நெற்றியில் குனிந்து ஒரு முத்தம் வைத்து விட்டு ஆஸ்கார் புன்னகை வேறு... (ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா என்றெல்லாம் யாரும் முனக கூடாது...)
என்ன இருந்தாலும் இத்தனை அழகான முதல் பரிசு யாருக்கு கிடைக்கும்?? சொல்லுங்க...
அன்ன்னிக்கு றெக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சவ தான்... இன்னும் கீழே லேன்ட் ஆகலை. அந்த குழந்தை பொம்மையை வீட்டில கொண்டு வந்து வெச்சுட்டு நான் பண்ண அளப்பரி இருக்கே... யாரையும் தொடக்கூட விடலை. நானே ஒரு ஷாப்பிங்க் மாலில் வாங்கியதாக அப்பாவிடம் பொய் சொல்லியாச்சு! அக்கம் பக்கத்து வீட்டு வாண்டுகள் அல்லது சொந்தக்கார குட்டி சாத்தான்கள் அந்த பொம்மை வேண்டும் என்று கேட்டு அழ ஆரம்பித்து விட்டால் சமாதானப்படுத்தும் போதே, என் அப்பா "நீ என்ன குழந்தையா? அழறா இல்லை? கொடுத்துடு... வேற வாங்கிக்கலாம்" என்று ஆரம்பித்து விடுவார். எனித்து விடுவது போல் அவரை முறைத்து விட்டு, "நான் உனக்கு புதுசு வாங்கி தரேன் கண்ணா" என்று அந்த குழந்தைகளை தாஜா செய்து அனுப்ப நான் பட்ட பாடு ... எனக்குத்தான் தெரியும் அந்த கஷ்டம்.
சமைக்கும் போது, இதர வேலைகள் பார்க்கும் போது, தூங்கும் போது என்று எப்போதும் என்னுடனேயே அதை வைத்துக் கொண்டிருந்தேன். என் அப்பா லைட்டா ஸ்மெல் பண்ண ஆரம்பிக்கவும் தான் சுதாரித்துக் கொண்டு, அதை பத்திரமாய் பேக் செய்து பாங்க் லாக்கரில் வைக்கலாம் என்று நினைத்து கடைசிய்யா பீரோவில் பத்திரப்படுத்தினேன்...
இதெல்லாம் இருந்தாத்தானே,

"ஜில்லுன்னு ஒரு காதல்"

Thursday, July 1, 2010

ஜில்லு இப்போ உனக்கு தாண்டா!

கடலை நன்றாக வறுபடத்தொடங்கிய நேரம், கடலை வறுத்தெடுக்க மணல் போடும் விதமாக நான் செல்லப்பெயர், கொஞ்சல் மொழி என அம்மணிக்கு நாலாபுறமும் செக் வைக்கத் தொடங்கினேன்.

எல்லா ஃபிகரையும் போல சுதாரித்துக்கொண்டவள் "எங்கப்பா ஏற்கனவே முடிவு பண்ணிட்டார்,மாப்பிள்ளை ரெடி" என்றெல்லாம் சீன் போட தொடங்கினாள்.

நானோ கொஞ்சமும் அசராமல் "யாரந்த அதிர்ஷ்டசாலி" என கடலையில் கொஞ்சம் பனைவெல்லம் சேர்த்தேன். (நாம தான் ஸ்மெல் பண்ற டாக் மூஞ்சியைப் பார்த்தே கண்டுப்பிடிச்சுடுவோமே!!! )அதுவுமில்லாம அடுத்தவன் ஃபிகரை கரெக்ட் பண்றதுல இருக்கற ஆனந்தம் இருக்கே! அடடா! சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தை...

அடுத்த நாள் மாலை நான் வழக்கம் போல கால் செய்யாததால் வருத்தம் கொண்ட போண்டாக்கோழி(இந்த விஷயம் பாப்பாக்கு தெரிய வேணாம். ரொம்ப வருத்தப்படும்:( )குறுந்தகவல் மூலம் கொஞ்சினாள்;

அன்று என் மாமன் மகளின் பர்த்டே!(அட நாலாங்கிளாஸ் தாங்க படிக்குது) அதனால நான் என் மாமன் பொண்ணை பார்க்க போறதா குறுந்தகவல் அனுப்ப அம்மணி தன்னைத்தான் சொல்றதா கோக்குமாக்கா புரிஞ்சுக்கிட்டு, "சரி வாங்க மச்சான் சீக்கிரம்"னு மெசேஜ் அனுப்பிட்டா...(பாவம் கொஞ்சம் புத்திசுவாதீனம் இல்லையாக்கும்) அப்படிப்போடு அரிவாளை... அயிரை மீனு மாட்டுச்சுனு அந்த பக்கம் படகை திருப்பினா திடீர்னு நெளியறா... நழுவுறா.. படாத பாடு படுத்திட்டாப் போங்க.. கடைசியா மூணு மணி நேரம் முக்கல் முனகலுக்கு பிறகு முத்தத்துடன் முற்றுப்புள்ளி வெச்சேன் பஞ்சாயத்துக்கு(அட ஃபோன்ல தாங்க‌...) அப்போத்தான் ஆரம்பிச்சுது,


"ஜில்லுன்னு ஒரு காதல்"

Friday, June 18, 2010

ஆன்லைன் காதல் - போட்டோஷாப் ஜாக்கிரதை!


போன்ல தொடங்கற ஆண் நட்புக்களிடம் எப்பவுமே எனக்கு பயம் கொஞ்சம் அதிகம். முகம் பார்க்காம பேச ஆரம்பிக்கறதால, ஈர்ப்பு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே இருக்கும். அதனால முதல்ல நட்புனு ஆரம்பிச்சு, கடலை வறுத்துக்கொண்டே காதலுக்கு போய் விடலாம் இத்தகைய உறவுகள். அதுவும் நம்ம ஜாக்கு கிட்ட முதல் நாள் பேசினதுலயே கொஞ்சம் பயம் வந்துருச்சு. சரி பார்க்காம பேசினாத்தானே இந்த பிரச்சினையெல்லாம், ஒரு போட்டோ மெயில்ல அனுப்பிட்டா??? இப்படி ஒரு கெரகம் பிடிச்ச யோசனை எனக்கு எப்படி வந்தது என்றே தெரியலை.

பையன் சில கொக்கி கேள்விகள் போடும் போதே நான் ரொம்ப புத்திசாலித்தனமா "சரி என் போட்டோ அனுப்பறேன். பாருங்க. ஆனா பார்த்துட்டு உடனே டெலிட் பண்ணிட‌ணும்"னு நிபந்தனைகளோடு நம்ம்ம்பி என் புகைப்படத்தை அனுப்பினேன். அந்த நாள்... என் வாழ்க்கையை இப்படி தலைகீழா திருப்பி போட்டுடுச்சு... பையன் அடுத்த நாள்ல இருந்து தான் இன்னும் அதிகமா கடலை வறுக்க ஆரம்பிச்சான். ஆனா போட்டோவை பத்தி மூச்... வாயே திறக்கலை. எனக்கு என்ன காரணம்னு தெரியவே இல்லை. நான் எப்படி இருந்தேன்னு கேக்கறதுக்கும் அவமானமா இருந்துச்சு. அப்புறம் பிற்காலத்துல தான் புரிஞ்சுது... இவன் ஒரு ப்ளானோடதான் சுத்திட்டு இருந்திருக்கான். இப்படி என்னை கொஞ்சம் கொஞ்சமா என்னை டீல்ல விட்டு மொத்தமா பிடிச்சுட்டான்.

நம்ம ஜாக்கு இலக்கிய சேவை செஞ்சுக்கிட்டு இருக்கற அவரோட ப்ளாக்ல தலைவரோட க்ளோஸப் போட்டோ ஒண்ணு தொங்க விட்டிருப்பார். அதுல சும்மா சொல்ல கூடாதுங்க... அத்தனை மொழுமொழுன்னு ஒரு ஸைடு போஸ்ல‌ அழகாக இருப்பான். சரி இத்தனை அழகா இருக்கற பையன் நம்ம போட்டோவை பார்த்து மயங்க மாட்டான் அப்படின்னு மறுபடியும் நம்ம்ம்பி நான் பெரிசாக‌ இவன் கடலையை கண்டுக்கலை. இருந்தாலும் இவரை இன்னும் ஸ்ட்ரெய்ட் போஸ்ல பார்க்கலையேன்னு அப்ப்டி ஏதாவது போட்டோ அனுப்புங்கன்னு கேட்க சரி அனுப்பறேஎன்னு சொன்னவர் ரெண்டு வாரம் கழிச்சு தான் அனுப்பினார். அப்போத்தான் புரிஞ்சுது போட்டோ ஷாப்ல இவர் என்னென்ன தில்லாலங்கடி வேலைல்லாம் பண்ணியிருக்கார்னு புரிஞ்சுது. அந்த ப்ளாக்ல இவர் அப்ப்டி எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு தங்க கலர்ல மின்னிட்டு இருப்பார்.ஆனா உண்மைல பையன் கருப்புதான். இதை படிக்கும்போது வேணா கோபத்துல அவர் முகம் கொஞ்சம் சிவந்திருக்கும்... ஹ்ம்ம்ம் இனி என்ன பண்றது? அதுக்கப்புறம் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு" என்னோட காலர் ட்யூனாயிடுச்சு. அப்புறம் என்ன?


"ஜில்லுன்னு ஒரு காதல்" தான்....

Monday, June 14, 2010

முன் தினம் பார்த்தேனே! ஹம்மிங்ஸ் ஆஃப் இண்டியா!


கடலை வறுக்க ஆரம்பிப்பதற்கு முன்பு வரை அம்மணியை ஒரு 28 இல்லை 30 வயது ஆன்ட்டி என்று தான் கற்பனை செய்து வைத்திருந்தேன். காரணம் என்ன என்பது நாளது வரை விளங்கவில்லை. மேலும் நமக்கு ஆதி காலம் முதலே கொஞ்சம் 'ஆன்ட்டிமேனியா' வேறு. அது ஆன்ட்டி இல்லை அம்மணி தான் என்று ஊர்ஜிதமான போது என் கன்பாயின்ட்டில் டார்கெட் ஃபிக்ஸ் ஆனது.அந்த இடத்தில் என் நிலை குறித்து உவமை சொல்ல பழமொழியேதும் கிடைக்கவில்லை. உங்களில் யாரேனும் உதவக்கூடுமெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.என் திருமுகத்தை வெளியிடுவதில் எனக்கு யாதொரு அசெளகரியமும் இல்லையாதலால் என் பிளாக்கிலேயே க்ளோஸப் புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் அம்மணியை நான் நேரில் பார்த்திராதபடியால் சில பல கொக்கி கேள்விகளை போட்டு இரண்டொரு நாளில் மின்னஞ்சலில் புகைப்படம் அனுப்பி வைக்க செய்தேன். நமக்கு காதல் கோட்டை அஜீத் அளவுக்கு ரிஸ்க் எடுக்க உடம்பிலயும் மனசிலேயும் தெம்பில்லை.
ச‌ரி விஷ‌ய‌த்துக்கு வ‌ருவோம். ஆஃபீஸ் க‌ம்ப்யூட்ட‌ரில் அந்த‌ மெயிலை ஓப்ப‌ன் செய்து க‌ண்க‌ளும் வாயும் விரிய‌ ஜொள்ளு வ‌ழிய‌ பார்த்திருக்கும் நேர‌ம் ஆஃபீஸ்பியூனும் பின்னாலிருந்து பார்த்து "யாரு சார் அந்த‌ ஃபிக‌ர்?' என்று ம‌ன‌சாட்சியில்லாம‌ல் கேட்க‌, டீயும் ஃபில்ட‌ரும் வாங்கி த‌ந்து அவ‌ன் வாய‌டைத்த‌து த‌னிக்க‌தை.புகைப்ப‌ட‌த்தை பார்த்த‌ பின்னும் ந‌ம்மிட‌மிருந்து எந்த‌ ரியாக்ஷ‌னும் இல்லாத‌தால் க‌டுப்பான‌ அம்ம‌ணி எப்ப‌டி கேக்க‌றதுன்னே தெரியாம‌ க‌ண்ட‌ப‌டி பினாத்திக் கொண்டிருந்த‌ போது ந‌‌ம‌க்கோ ப‌ய‌ங்க‌ர‌ குஜால். அத‌ற்கு பிறகு "ப‌ப்லு(அம்ம‌ணியின் செல்ல‌ப்பெய‌ராமாம்!!) நீ ஃபோட்டோல‌ எல்லாம் அவ்ளோ ந‌ல்லா இருக்க‌றதேயில்லைடி"னு இவ‌ ஃப்ரென்ட்ஸ் சொல்லுவாங்க‌னு இவ‌ளே சொன்னா. (அதாவ‌து நேர்ல‌ இவ‌ங்க‌ சுஷ்மிதா சென்னுக்கு சுடிதார் போட்டு விட்டா மாதிரியே இருப்பாங்க‌ளாம்)ஆனால் அப்போ சொன்ன‌துக்கு ஒண்ணுமே சொல்லாம‌ 'ச‌ரி போ'னு விட்டுட்டேன். (பின்னே!இன்னும் க‌ரெக்ட் ப‌ண்ண‌லை இல்ல‌!)
நாம‌ போட்ட‌ க‌ட‌லையில‌ அம்ம‌ணி ம‌ன‌சில ந‌ம்ம‌ இமேஜ் ஜிவ்வுன்னு ஏறிடுச்சு(வோட‌ஃபோன் பில் நான்கு இல‌க்க‌ங்க‌ளில் ஏறிடுச்சு. உஸ்ஸ்ஸ் அப்பா... ஒரு ஃபிக‌ர் க‌ரெக்ட் ப‌ண்ண‌ எம்புட்டு க‌ஷ்ட்ட‌ப்ப‌ட‌ வேண்டியிருக்கு!!) ப‌ல‌ த‌ருண‌ங்க‌ளில் தூண்டில் கேள்விக‌ளில் ந‌ழுவியோடிய‌ அம்ம‌ணி ஒரு நாள் தானாக‌வே கொதிக்க‌ற ம‌சாலாவில் குபீர்னு குதிச்சுட்டாங்க‌... அந்த‌ எபிஸோடு நெக்ஸ்ட்டு. இது அவ‌ங்க‌ப்பா கிள‌ம்ப‌ற‌ நேர‌ம். ஒரு ரெண்டு ம‌ணிநேரமாவது காத‌ல் ப‌ண்ண‌னும். ம்ம்ம் என்ன‌டா காத‌ல்னு கேக்க‌றீங்க‌ளா? (நீங்க‌ கேக்க‌லனாலும் நாங்க‌ இத‌சொல்லித்தான் போஸ்ட்ட‌ முடிப்போம்)
அதாங்க‌

"ஜில்லுன்னு ஒரு காத‌ல்"

Thursday, June 10, 2010

ஒரு நாயகன் உதயமாகிறான் -ஜில்லுனு ஒரு காத‌ல்


மக்களே... தலைவரோட ப்ளாக் பார்த்தீங்கன்னா படிப்பார் எவருமின்றி பாவமாக இருந்தது. ஆனால் கவிதைகள் ஒவ்வொன்றும் சும்மா சொல்லக்கூடாது,அத்தனை அழகாய் இருக்கும். அப்ப்டி ஒரு சொல் நயம் பொருள் நயத்தோட புலவர் பின்னியிருப்பார். நமக்கு வேற கவிதையே எழுத வராதா... அப்படியே எழுதினாலும் எல்லோரும் "ஏம்மா உனக்கு இந்த வேலை"னு பின்னூட்டத்தில் கலாய்ப்பாங்க... அதனால நல்ல கவிதைகளை பார்க்கவே சந்தோஷமா இருந்துச்சு. சரி, இவ்வளவு அருமையான கவிதைகள் அனாதையாய் இருக்கின்றனவே என்று பரிதாபப்பட்டு, எல்லோரையும் போல கமென்ட் போடற‌தோட நிற்காமல் "உங்கள் வலைப்பக்கத்தை தமிழ்மணம் திரட்டி போன்றவற்றில் ஏன் இணைக்கவில்லை"னு கேட்டு, 'சரி இவருக்கு அதெல்லாம் தெரியாது போல இருக்கு'னு நெனச்சு என் மெயில் ஐடி கொடுத்தேங்க... கொடுத்ததும் பதிலுக்கு மெயில் ஐடி கொடுக்க வேண்டியததுதானே... உடனே செல்போன் நம்பர்தான் பதிலா வந்தது.

ரொம்பவும் யோசிச்சு சரி ஒரு உதவி தானே போனா போகுதுனு "ஹாய் திஸ் இஸ் ...."னு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.(அன்னிக்கு நான் வேற ஆஃபீஸ்க்கு லீவு போட்டுட்டு வீட்ல வெட்டியா உக்காந்துட்டு இருந்தேன்.பொழுது போகல. அதுவும் ஒரு காரணம்). நம்ம ஜாக்கு ஆஃபீஸ்ல பயங்கர பிஸி. உடனே கால் பண்ணிட்டார். அப்புறமென்ன? அப்பவே ரெண்டு பேரும் சேர்ந்து அவ‌ரோட‌ வ‌லைப்ப‌க்க‌த்தை திர‌ட்டி மாதிரியான‌ வ‌லைப்ப‌க்க‌ங்க‌ளில் இணைச்சுட்டோம்.

அதுக்க‌ப்புறமும் த‌லைவ‌ர் அட‌ங்க‌‌வே இல்லை. டெம்ப்ளேட் மாத்த‌லாமா, எப்ப‌டி மாத்த‌ற‌து, எந்த‌ டெம்ப்ளேட் ந‌ல்லா இருக்கும், பாலோய‌ர்ஸ் விட்ஜெட் வ‌ர‌லையே என்ன‌ ப‌ண்றது, இன்னிக்கு ஒரு போஸ்ட் போட்டேன் அதை எப்ப‌டி த‌மிழ் ம‌ண‌த்தில் அப்டேட் ப‌ண்றது, உங்க ப்ளாக் ஃபுல்லா ப‌டிச்சேங்க‌, அந்த‌ க‌தை சூப்ப்ப‌ர்ர், இன்னிக்கு நீங்க என்ன சாப்ப்டீங்க‌, ஆஃபீஸ்க்கு டெய்லி ப‌ஸ்லியா போறீங்க‌ கூட்ட‌மா இருக்குமே அதுவும் சென்னைல‌, நீங்க எந்த காலேஜ், நான் காலேஜ்ல ரொம்ப வால்பைய‌னாக்கும் அப்ப‌டி இப்ப‌டினு க‌ட‌லைய‌ வ‌றுத்து வ‌றுத்து வாயில் போட்டுக்கொண்டிருந்தார்.
ந‌டுவில் அவங்க சித்தி வீட்டுக்கு போய் அங்க இருக்கிற குட்டீஸ் கூட பேச‌ விட்டு இம்ப்ரெஸ் ப‌ண்ணுவார். ஃப்ரென்ட்ஸையெல்லாம் கண்டுக்கவே கண்டுக்காம நீ மட்டும் தான் எனக்கு முக்கியம் அப்படிங்கற மாதிரி பேசுவார்.(இதே ஜாக்கு பின்னொரு நாள் எங்கள் கடற்கரை சந்திப்பில் தூரத்தில் ஒரு நண்பனை பார்த்து விட்டு, அந்த நண்பனே இவரை கண்டுக்கொள்ளாத போதும், என்னை அலையில் தனியாக நிறுத்தி விட்டு(:(), "டேய் டேய்... நண்பா"னு, கத்திகிட்டே அவன் பின்னாடி ஓடி கைகுலுக்கிட்டு தான் திரும்பி வந்தார். இந்த கதையை நான் இன்னொரு நாள் விலாவாரியாக சொல்றேன்).

இப்போ உங்க யாருக்காவ‌து க‌ட‌லை வ‌றுப்ப‌து எப்ப‌டிங்க‌ற த‌லைப்பில் ஏதாவ‌து சந்தேக‌ம் இருந்தால் ஜாக்கை கேட்க‌லாம். த‌லைவ‌ர் அதுல‌ பி.ஹெச்.டி. போனை கையில எடுத்தார்னா ஒண்ணு அவர் மொபைல் பேட்டரி லோனு ஸ்விட்ச் ஆஃப் ஆகணும், இல்லைனா என்னோடது ஸ்விட்ச் ஆஃப் ஆகணும். அப்படி இல்லைனா என் அப்பா கால் வெயிட்டிங்க்ல இருந்து நானே இவர் call-ஐ கட் பண்ணனும். அது வரைக்கும் செல்போனை காதிலிருந்து ஒரு இன்ச் நகர்த்த மாட்டார். இப்ப‌டி மணிக்கணக்கில் அவ‌ர் பேச நான் கேட்க, நான் பேச அவ‌ர் கேட்க... அவரோட‌ வோடஃபோன் போஸ்ட்பெயிட்டில் பில்லு ஏற... அப்புற‌மென்ன "ஜில்லுனு ஒரு காத‌ல்தான்"